Thursday 20 August 2015

சங்கிலி

சங்கிலி
சி.மோ. சுந்தரம்
விஷயத்த கேட்டு கொஞ்சம் ஆடி போயிட்டேன். அந்த அதிகாலையில் பொன்னார் வீடு நெருங்க நெருங்க ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. எதோ தொண்டை எல்லாம் அடைக்கிற மாதிரி. வீடே அமைதியா இருந்தது. ராமன் அண்ணன் தான் வந்து கதவ திறந்தாரு. உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் ஒரு ஆணின் அரற்றலும் கேட்டுச்சி. உள்ளே தனலட்சுமி அக்கா வாயில முந்தானைய தினிச்சிகிட்டு விசும்பிகிட்டு இருந்தது. என்னை பார்த்ததும் அழுகை கூடுச்சி. உள்ளே சங்கரன் தலையை குனிஞ்சமேனிக்கு உக்காந்து இருந்தான். தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிகிட்டு இருந்தான். தலையெல்லாம் மண்ணும் தும்புமா இருந்தது. கையை ஒரு கைலியால கட்டி இன்னொரு முனையை ஜன்னலில் கட்டி வச்சிருந்தாங்க. அவன் என்னமோ சொல்லி அரற்றிகிட்டு இருந்தான்.
தனலட்சுமி அக்கா வாய்விட்டு அழுதுச்சி,
"அப்பாவும் போயிட்டாரு, இனி நம்ம நாதியத்து போயிடுவோம்னு சித்தம் கலங்கிட்டானே என் தம்பி ...அய்யோ.."
பெருங்குரலில் தனலட்சுமி அழுதது.
தனலட்சுமி அக்காவோட கணவர் பொன்னார் அதட்டினார், "த! சும்மா ஒப்பாரி வச்சிக்கிட்டு. மச்சான் எதோ அதிர்ச்சில இருக்காபுல. எல்லாம் சரியாகிடும்"
தனலட்சுமி அக்காவோட பொண்ணு சித்ரா ஓராம உக்காந்து இருந்தது.
"ஏம்மா! நீ காலேஜ் கிளம்புல?'' என்றேன். அந்த பிள்ளை ஆறரை மணிக்கே தயாராகி ரோட்டுக்கு போய்டும் காலேஜ் பஸ் பிடிக்க.
கொஞ்சம் பிதிறி போய் இருந்தது, "இல்லை மாமா"என்றது. வீடே ரெண்டு பட்டு போய் கிடந்தது.
"என்னதான் ஆச்சு ?" இன்னும் தெளிவே இல்லாம கேட்டேன்.
தனலட்சுமி அக்கா சொன்னது, "நேத்து  ராத்திரி  மதில் சுவது மேல ஏறி நின்னுகிட்டு கத்தி இருக்கான். அக்கபக்கம் ஆளுங்க வந்து சொன்னாங்க. போலீஸ் வேற போன் போட்டுட்டாங்க. அப்பறம் நாங்க போயி கூட்டியாந்தோம்."
மூக்கை உறிஞ்சிவிட்டு தொடர்ந்தாள், "இங்க கூட்டியாந்து வச்சிக்கலாம்னு பார்த்தா... வயசு புள்ள வூட்ல இருக்கு" குரல் உடைந்து அழுதாள், "யான் தம்பி இப்பிடி சித்தம் கலங்கி போவான்னு நான் நினைக்கலியே... அந்த சிரிக்கிய என்னைக்கி கட்டிகிட்டு வந்தானோ அன்னைக்கே அவனுக்கு வாழ்க்க சீர் கொலைஞ்சி போச்சு"
ராமன் அண்ணன் என்னை வெளியே வரும்படி சைகை செய்தார். நானும் வெளியே போக அவர் தொண்டையை செருமி கொண்டு ஆரம்பித்தார், " எப்பிடி நாடகம் நடிக்கிதுங்க பாரு... இதுங்க மட்டும் அவனை நாதி இல்லாம விட்டில்லாம போனா, அவன் இப்பிடியா பைத்தியம் புடிச்சி நிப்பான். ச்சே ... மனசு ஒரு மாதிரி பண்ணுதுப்பா. சின்ன வயசுல இருந்து பார்த்த பய ..இப்பிடி சித்தம் கலங்கி நிப்பான்னு நினைக்கலை.. ஆயி அப்பன் இருந்த வரைக்கும் தாங்கு தாங்குன்னு தாங்கினாங்க. கட்டுனவளும் வுட்டுடுட்டு ஓடிட்டா. இப்போ ஆயி அப்பனும் இல்லைன்னு தெரிஞ்சதும் கலங்கி போய்ட்டான்."
உண்மைதான் இப்படி ஓரத்தனோட எந்த பெண்ணும் குடித்தனம் பண்ணமாட்டா. நல்ல படிப்பு சங்கரனுக்கு, ஆனா வேலைக்கு போனதில்லை. அம்மா செல்லம். ஒரே பையன்னு பொத்தி பொத்தி வச்சிட்டாங்க. அப்பா அம்மா ரெண்டு பெரும் கவர்மெண்ட்டு வேலை செஞ்சவங்க. பென்ஷன் வந்துச்சி. சொந்த வீடு வாசல். புள்ளைய வேலைவெட்டிக்கு போன்னு சொல்லல.  ஒத்த புள்ளைன்னு பெரியம்மாவும் பெரியாப்பாவும் அப்படி செல்லம் குடுத்தாங்க. ஒரு வயசுக்கு மேல அவன் வேலை வெட்டி இல்லாம இருக்குறத அவங்களே சகிச்சிக்கல .. "ஒரு கல்யாணம் பண்ணினா  சரியா பூடும்"னு தான் பாலாவ கல்யாணம் பண்ணி வச்சாங்க. பாலாவுக்கும் சங்கரனுக்கும் ஒரு கொழந்த பொறந்துச்சி. ஆனா சங்கரன் வேலைக்கி எல்லாம் போற மாதிரி தெரியல. பாலா எவ்ளோ சொல்லி பாத்திச்சி. எப்பவும் சண்ட நடக்கும். பெரியம்மாவும் பெரியப்பாவும் சங்கரன் பக்கம் சேந்துக்குவாங்க, பத்தாததுக்கு தனலட்சுமி அக்காவ வேற கூட்டிடுவாங்க. தனலட்சுமி அக்கா பக்கத்து தெருல தான் இருந்தது. தனலட்சுமி அக்காவோட பேராச எல்லாருக்குமே தெரிஞ்சது தான். பாலாவோட நகை வரைக்கும் அதுகிட்ட தான் இருந்தது, "நான் லாக்கர்ல வக்கிறேன்.. இங்க தொறந்த வூட்லையா போட்டு வைப்ப?"ன்னு சொல்லி வாங்கிட்டு போச்சு அவ்ளோதான். ஏதாவது விசேஷம்னா தனலட்சுமி அக்கா பாலாவோட நகைய போட்டுக்கிட்டு வலம் வரும். எந்த பொண்ணு தான் பொறுத்துக்குவா?  "என் நகை எனக்கு வேணும்"னு கேட்ட பொண்ண அம்மா வூட்டுக்கு அனுப்பிட்டாங்க. பஞ்சாயத்து அப்பப்போ நடந்துச்சி. பாலாவோட வீட்ல அத அனுப்பமாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. அங்க போயி வேலைக்கு போன பொண்ணுக்கு யாரை புடிச்சி போவ, அது அப்படியே போய்டுச்சி. புள்ளை ஒத்தையா நின்னுட்டானேன்னு இன்னும் சவரட்ச்சனா செஞ்சாங்க சங்கரனுக்கு.
பெரியம்மா சாஞ்சி, எடுத்து போட்டப்பதான் சங்கரன் வேற ஆளா தெரிஞ்சான். அப்பிடி அழுதான். சங்கரன் ரொம்ப பயிந்து போய்ட்டான்.  
பெரியப்பாவுக்கு முன்னாடியே கைக்கால் உழுந்துதான் கெடந்தாரு. பெரியப்பாவ சங்கரன் தான் பாத்துகிட்டான். பெரியம்மாவோட பேமிலி பென்ஷன் பெரியப்பாவுக்கு வந்துச்சி அவரும் பென்ஷனர் தான். காசுக்கு மொடை இல்லாம இருந்தது.
"ஏதாவது வேலைக்கு போவனும்ண்ண" என்பான், பொறவு அவனே யோசிச்சிட்டு "அப்பாவ யாரு பாத்துக்குவா?"ன்னுட்டு விடுவிடுன்னு நடைய கட்டிடுவான். பெரியாப்பவும் போயிட்டாரு. அன்னைக்கி சங்கரன் வானத்த பாத்து அழுதுகிட்டு நின்னான். பெருசா கத்தல. வெறும் விசும்பல், ஆனா பாத்தவங்கள உலுக்கிடும் விசும்பல். எழவு வூட்ல அவனுக்கு தான் சனம் அழுதுச்சி. சங்கரன எனக்கு பெருசா பிடிக்காது, ஆனா அன்னைக்கி எனக்கே லேசா கண்ணு கலங்கிடுச்சி. ரொம்ப பாவமா தெரிஞ்சான். அப்பன் ஆயி பண்ணின தப்பு. பையனை பொத்தி பொத்தி வளர்த்து 34 வயசுல கொழந்த மாதிரி தனியா இந்த ஒலகத்த எதிர் கொள்ள முடியாம கலங்கி போய் நின்னான். சாவு முடிஞ்சி மூனாம் நாலு இப்படி கொலைஞ்சி நிப்பான்னு நெனைக்கல.
ராமன் அண்ணன் தான் பேச்சை ஆரம்பிச்சாரு, "ஏம்ப்பா! என்ன தான் பண்றத.. டாக்டர் கீக்ட்டர் கிட்டு கூட்டி போவோமா? "
அதுக்குள்ள அக்கம் பக்கமுள்ள ஆளுங்களும் சொந்தக்காரங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் கூச்சல் அதிகமாவ, சங்கரன் கத்த ஆரம்பிச்சிட்டான். கைலியால கட்டியிருந்து கையை அவுக்க முயற்சி பண்ணினான். ஆளுங்க புடிக்க இன்னும் முண்ட ஆரம்பிச்சிட்டான். சுத்தி இருந்தவங்க அவன மொத்தமா பைத்தியக்காரனா ஆக்கிகிட்டு இருந்தாங்க.
"அவுத்து வுடு நான் போறேன், அவுத்து வுடு நான் போறேன்" அவனோட போராட்டத்துக்கு பதில் வழக்கம் போல அடியாதான் விழுந்தது.
"அண்ண வேணாம்ண்ண" என் தடைகள மீறி அவனுக்கு அடி விழுந்தது.
"விடுங்க தம்பி ! நாலு போட்டா தான் அடங்குவான். நேத்தி மதில் சொவுத்துல துணியில்லாம நின்னிருக்கான். என் வூட்டுல வயசு பொண்ணுங்க இருக்கு என் பொஞ்சாதி இருக்கு. திமிர் கொண்ட நாயீ"
எனக்கு கத்த வேணும்னு தோணுச்சி.
"டேய் ! தெரிஞ்சாடா செஞ்சான் அவன்" எனக்குள்ளேயே கத்தினேன். வெளியே கத்த முடியாது. கத்தினால் என்னையும் சங்கரனாக்க இவங்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. நானும் சம்சாரியின் அந்தஸ்த்தோட இருந்தாவனும்.
"அண்ண ! பொறுமண்ண. அவன் சொயநெனைவு இல்லாம இருக்கான். கொழந்த மாதிரி. இருங்கண்ண"
சங்கரனின் முழு நிர்வாணத்த பார்த்த இன்னொரு பொண்டாட்டியின் புருஷன் கத்தினாரு, "கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேருங்கய்யா .. ஊருக்குள்ள வச்சிக்கிட்டு….  இவனுத பாக்கத்தான் நாங்க இருக்கோமா ?"
ஊரு பிரசிடென்ட்டு வந்துட்டாரு. வழக்கமான விசாரிப்புங்களுக்கு பொறவு, "ந்தா பாருங்க ! அவன் புத்தி பேதலிச்சவன், சொயநெனைவு இல்லாம செய்றான், எல்லாம் சரிதான்... ஆனா ஒன்னு கெடக்க ஒன்னு செஞ்சிட்டானா அப்பறம் வான்னா வராது
அக்கா தந்த காப்பிய வாங்கி குடிச்சிட்டு தொடர்ந்தாரு, "வீட்டோட வச்சி பாத்துகிறதா இருந்தா... யோக்கியமா கட்டி வையுங்க. வைத்தியம் பாருங்க. வெளியில யாரும் தொல்லைக்கி ஆளாவ கூடாது. பாத்துக்குங்க"
தனலட்சுமி அக்கா விக்கித்து நின்றாள் , "அய்யா தப்பா நெனைக்க கூடாதுங்க"
"சொல்லும்மா"
"நானும் வயசு பொண்ண வீட்ல வச்சிருக்கேன். ஒன்னுகெடக்க ஒன்னு ஆச்சின்னா ..."
பொன்னார் செருமினார்," இத சொல்ல பயமா தான் இருக்கு. அவஞ்சொத்து மட்டும் வேணும், சித்தம் கொலஞ்சவன பாக்க துப்பில்லன்னு சொல்லும் சனம். எனக்கு ஒரு பொண்ணு இருக்கு. இப்பிடி இவன வச்சிக்கிட்டு நாளைக்கி கல்யாணம் காட்சின்னா எவன் வருவான் பொண்ணெடுக்க? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஒரு முடிவெடுங்க... உங்க வீட்ல இருந்தா என்ன பண்ணுவீங்களோ, அத சொல்லுங்க"  
பிரசிடென்ட்டு தோரணையா எல்லாரையும் பாத்தாரு, "பொன்னாரு சொல்றதும் சரிதான். புத்தி பேதலிச்சவன் என்னைக்கி சொகமாயிருக்கான்? சரி ! ஒரு நல்ல ஆஸ்பத்திரில சேத்து உடுங்க"
ராமன் அண்ண பேச்ச ஆரம்பிச்சாரு, "எந்த ஆஸ்பத்திரிலேயும் காலா காலத்துக்கு வச்சிக்க மாட்டான். அவனுக்கு என்ன சொத்தா கொற? அவன் ஆயி அப்பன் அவ்ளோ சேத்து வச்சிருக்காங்க. கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரின்னு கொண்டு போவாம, நல்ல தனியார் ஆஸ்பத்திரில வச்சி பாக்க சொல்லுங்க"  
என் பங்குக்கு நான் சொன்னே, "இன்னைக்கி தேதில இது ஒன்னும் தீர்க்க முடியாத நோவு இல்ல. காசு பணம் கட்டி பாத்தம்னா, சரியா போய்டும். இன்னும் இப்பிடி சங்கிலி போட்டு எல்லாம் கட்டிவக்கிறது மொற இல்ல"
பொன்னாரு என்னை வெறித்து பார்த்தாரு, "பட்டாளத்தாரு தம்பி! ஒங்களுக்கும் பங்காளி பாசம் இருக்கிறது எல்லாம் உண்மதான்... யான் உங்க பங்காளி மக்கள நீங்களே வச்சி பாருங்களேன்"
ப்ரெசிடெண்ட்டு தொண்டையை செருமிவிட்டு, "சரி பொன்னாரு! சங்கரனுக்கு சேரவேண்டிய சொத்த முழு மனசா பட்டாளத்தாருக்கு குடுங்க. பட்டாளத்தாரு பாத்துக்க போறாரு... என்ன பட்டாளத்தாரே நாஞ்சொல்றது?" என்றார் என்னை பார்த்து.
பொன்னாரு அவசரமா இடைமறித்து, "அது தானய்யா நானும் சொல்றேன், சொத்த ஆள பாத்தியத எங்களுக்கு உண்டுன்னா, எம்மச்சான பாத்துக்குற கடமையும் இருக்கு. நாங்க பாத்துக்குறோம் ... லட்சமில்ல கோடி ரூவா அவட்டுமே."
ராமன் அண்ண என்னை பாத்து நக்கலா சிரிச்சாப்புல. நானும் சிரிச்சேன் ஆனா விரக்தி தான் மண்டி கெடந்தது.
பேச்சு வார்த்த ரொம்ப நேரம் நடந்தது. இடைல அப்பப்போ முண்டுன சங்கரன இளைஞர் நற்பணி மன்றம் அமுக்கியது. கடைசியா தனியார் ஆஸ்பத்திரிக்கி போனை போட்டு வண்டி வந்தது. சங்கரனுக்கு ஊசி போட்டு கொண்டு போனாங்க. கூடவே நானு, பொன்னாரு, தனலட்சுமி அக்கா இன்னும் ரெண்டு மூனு இளந்தாடி பசங்க போனோம்.   
ஆஸ்பத்திரில டாக்டர் தெளிவா சொல்லிட்டாரு, சங்கரனுக்கு ட்ரீட்மன்ட் மட்டும் தான் தரமுடியும். ஒரு மாசத்துக்கு அட்மிட் பண்ணி வைத்தியம் பாக்கலாம்னு. ஒரு மாசம் சங்கரனுக்கு செலவே ஏகமாச்சு. கொஞ்சம் தேவலாம் போல இருந்தான் சங்கரன். ஆனா பேச்சு ரொம்ப கொழரிச்சி. அஸ்பத்திரிலேயே தனலட்சுமி அக்கா தனியார் காப்பகத்த பத்தி விசாரிச்சு வச்சிருந்தது. சங்கரன சேக்கணும்னு.
"வருசத்திற்கு ஒரு லட்சம் கட்டணுமாம். வேணும்ன்குற போது போய் பாத்துக்கலாமாம். எல்லா சவரட்ச்சனையும் செய்வாங்களாம்" தனலட்சுமி அக்கா எங்கேயோ பாத்துகிட்டு சொன்னுச்சி. நான் வூட்டுக்குள்ள பாத்தேன், சங்கரன் கட்டிலில் காலை நீட்டி போட்டுக்கிட்டு தலையை ஆட்டிகிட்டு இருந்தான். ஒரு கயிறு மணிக்கட்டில் கட்டி இருந்தது, சங்கிலி கட்டிலோடு இணைக்கப்பட்டிருந்தது.
"ஏங்க்கா இன்னும் கட்டி வச்சிருக்கீங்க?"
"லூசுப்பய எப்போ எதுவும் செய்வான்னு தெரிய மாட்டேன்து."
நான் தனலட்சுமி அக்காவ பார்த்தேன். குற்ற உணர்ச்சியோட தலைய தொங்க போட்டுக்கிட்டு சொல்லிச்சி, "சித்ரா ரொம்ப பயப்படுதுப்பா"
நான் கிளம்பினேன், அக்கா நிறுத்தி சொல்லிச்சி, "நாளைக்கி கொண்டு போயி உடுலாம்னு இருக்கோம். இங்க எதுவும் நல்ல ஹோம் இல்ல. அதான் சென்னைல பாத்திருக்கோம். காசுக்கு தான்."
"சரிக்கா " நான் கிளம்பினேன்.
ரெண்டு நாள் கழிச்சி பொன்னார் வீட்ல ஒரே களேபரம். நான் போனேன் ஊரே கூடி கிடந்தது. தனலட்சுமி அக்கா பெருங்குரலில் அழுது கொண்டிருந்தது. பக்கத்தில் ராமன் அண்ண நின்னுகிட்டு இருந்தார்.
கேட்டேன், "என்னண்ண ஆச்சு?"
"கூட்டிகிட்டு போவும் போது குதிச்சி ஓடிட்டானாம். தேடுனாங்கலாம் கெடைக்கலையாம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டு வந்திருக்காங்க" ராமன் அண்ணணோட கொரல்ல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. நான் சட்டென்று திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.
மெட்ராசுக்கு ஒரு நாலு மாசம் கழிச்சி பொண்டாட்டி புள்ளைங்க கூட போயிருந்தோம். சென்ட்ரல் ரயிலடி பக்கம் ஒருத்தன் ரொம்ப தாடி, முடி சடை மண்டி கிடந்தான். பழைய காக்கி பேண்ட்டு போட்டிருந்தான். மேல் சட்டை இல்ல.
நான் எங்க வீட்ல அவளை நிக்க சொல்லிட்டு போய் ஒரு இட்டிலி பொட்டலம் வாங்கிகிட்டு வந்து குடுத்தேன், வாங்கிகிட்டான்.
திரும்பி அவனை பாத்துகிட்டே வந்தேன். என் வீட்டுல கேட்டாப்புல, "என்னங்க அப்பிடி பாக்குறீங்க ?"
"நம்ம சங்கரன் சாடைல இருக்கான் இல்ல?"
"ச்சே.. இல்லீங்க. மாமா நல்லா செவப்பா இருப்பாங்க, அதில்லாம அவங்க போகும் போது லுங்கி இல்ல கட்டிக்கிட்டு போனாங்க. அவங்களா இருக்காது" எனக்கு கொஞ்சம் லேசாக கண்கலங்கியது. திரும்பி திரும்பி பாத்துகிட்டே நடந்தேன். உண்மையில் நானும் அவனை வச்சு சோறு போட தயங்கிட்டேன். யாரையும் குத்தம் சொல்ல நான் அருகத இல்லாம இருந்தேன். எல்லார போலையும் நானும் வேடிக்கைத்தான் பாத்தேன். சங்கிலி சங்கரனுக்கு மட்டுமில்ல எனக்கு இணைப்பட்டிருந்துச்சி.
 இது சங்கரனா இருக்கனும்னும் நெனச்சேன் இருக்க கூடாதுன்னும் நெனச்சேன்.

No comments:

Post a Comment