Saturday 21 June 2014

மாயரத்துல இருந்து கொஞ்சம் தூரம் எங்க ஊரு ...
எங்க ஊருன்னா எங்க பாட்டன் முப்பாட்டன் இருந்த ஊரு...
இந்த சித்திரை வையாசில அங்க போய்டுவோம்...
காலைல ஒரு அஞ்சர மணி வாக்குல காவிரி பக்கம் போய்டுவோம்...
தூரத்துல கோயில் மணி அடிக்கிற சத்தம் ...
அரை இருட்டு ....
ராத்திரி முழுக்க சுத்தமான காத்து .. சில்லுன்னு இருக்கும்...
காத்துல கோயில் வாசம் வரும் ...
தலைல அரப்பு பொடிய வச்சிக்கிட்டு ..காவிரில கால் நனைக்கிற சொகம் தனி..
அரப்பு பொடி, கோயில் வாசம், வயல் மண் வாசம், மாட்டு கோமிய வாசம் எல்லாம் சேந்து மயக்கும்..
கொஞ்ச நேரம் கடவுள தொட்டா மாதிரி இருக்கும்..
காவிரி மோதந்து வர கொய்யா மாம்பழம் எல்லாம் சாமி எங்களுக்கு அனுப்பிவுட்டா மாதிரி தெரியும்.
அப்படியே மூக்கை கையாள மூடிகிட்டு காவிரில மூழ்கி அப்படியே கொஞ்சம் நேரம் இருப்போம்...
எங்கியோ அண்ட வெளில இருக்கா மாதிரி இருக்கும் .. ஙொய்ன்னும் காது...
வெளில இருந்து பேசுற சத்தம் ஒரு மாதிரி கேக்கும்...
கரை முதுகுல உக்காந்துகிட்டு ஏதாவது பெருசு ஆலாபன பண்ணுச்சின்னா , அதவிட சுவர்க்கம் இன்னுமே இல்லை.
அப்படியே தண்ணிக்குள்ளேயே இருக்கலாம் போல இருக்கும்..
மொத முழுக்கு போட்டு குளிச்சிடுவோம் .. அப்பறம் ஆட்டம் ..
மூக்கு வரைக்கும் தண்ணில மூழ்கி இருக்க வெறும் கண்ணை மட்டும் வெளில வச்சிக்கிட்டு பார்ப்பேன்...
அப்படி ஒரு பார்வை ... கரேல்னு வானம் ..கெழக்கால செவப்பு ... அதுல கோயில் கோபுரம் ... காலைல பறக்கும் பறவைங்க.. ஆத்துக்கு வரும் மாடுங்க ...
காவேரி அளவுக்கு எங்க உடம்பு குளிரும் வரை ஆட்டம்...
வெளியே வந்ததும் கொல பசி பசிக்கும் பாருங்க.... அது வாழ்க்க!!

No comments:

Post a Comment