Friday 13 December 2013

இருட்டு கண்களில் மங்குகிறது. எவனோ ஒருவன் என் சிந்திய குடலை அள்ளி திணிக்கிறான். வலிகள் மறத்துவிட்டன. காதை பிளக்கும் சத்தங்கள் இப்போது கேட்கவில்லை. ஓடும் எவனோ என் சிதைந்த காலை மிதித்து ஓடுகிறான். குறை சொல்ல மனம் வரவில்லை. வலி பழகிய ரணங்கள். பையில் அவள் படமும் பிள்ளைகள்  படமும் இருக்கிறது எடுத்து பார்த்தவிட துடிக்கும் மனதிற்கும் துண்டித்து தனியே கிடக்கும் கைக்கும் தொடர்பில்லை. நரம்பில்லா தொடர்புகள் உறுப்புகளுக்கு மட்டும் இல்லை. வந்துவிடுவேன் என்று கூறிய வார்த்தைகளை பொய்யாக்கி கொண்டிருக்கிறேன். அவள் காத்திருக்க கூடும். என் மகளுக்குத்தான் காத்திருப்பு பிடிக்காது. மகனுக்கு உணரும் வயதே இல்லை. என் சிதைந்த உடலை ஒருவன் கால்களால் ஒதுக்கி ஓரமாய் விடுகிறான். என் கண்கள் அவனை வெறிக்கின்றன. அவனுக்கு கண் முழுக்க குற்றவுணர்வு. என் மகளின் செல்ல பெயர் அவன் அறிந்திருப்பானோ. என்னவளுக்கு சேதி தெரிந்திருக்குமோ. நான் தண்ணீரில் மூழ்கி காட்டும் விளையாட்டிற்கே அஞ்சி நடுங்கி மார்பில் முகம் புதைப்பாளே ? சிந்திய என் உடல் கண்டால் மாண்டே போவாளோ? நாளை நான் சென்று விடவில்லை என்றால்  பள்ளிக்கு போகமாட்டாளே என் செல்ல இளவரசி. எழுந்துவிட துடிக்கிறேன், சாலையில் சிந்தி கிடக்கும் என் அவையங்கள் அனுமதி மறுக்கிறது. வாங்கிய சம்பளம் பையிலிருக்கிறது, யாரும் எடுத்து விட கூடும். மூன்றாம் தேதி மளிகைக்கு கொடுக்க வேண்டும், ஐந்தாம் தேதி பள்ளிக்கு கட்டணம், பால்காரன் வந்துவிடுவான். பையிலிருக்கும் பணம் பத்திரமா? வாங்கிய கேட்பரிஸ் சாக்கலேட்டும் அதனுடனே வைத்திருக்கிறேன். பணத்தை எடுப்பவன் புரிந்து கொள்வானோ அதில் என் குடும்பத்தின் அடுத்த மாத உணவிருக்கிறதென. காக்கியும் வெள்ளையுமாய் ஆட்கள் ஓடுகிறார்கள் என்னை இறந்தவனென்று கருதி. ஓலமிட துடிக்கிறது மனது காப்பாற்றிவிடு என. இருள் இப்போது கண்ணையும் மீறி பெரிதாகுகிறது. வழிகளும் சேர்ந்தே. மாலை வந்து துணியெடுக்க போகலாம் என்று சொல்லிவிட்டு வந்தேனே என் சின்ன ராணியிடம். இன்னும் காத்து கொண்டே இருப்பாளோ ? இனி அப்பன் வரமாட்டான் என்பதை ஏற்றுகொள்வாளோ ? நான் எந்த போரும் புரியவில்லையே என் மேல் ஏனடா தொடுக்கிறீர்கள்? வலி கூடுகிறது. இனியொரு குண்டு என் தலையருகே வெடிக்க ஆண்டவனை வேண்டுகின்றேன். விட்டு தான் போகிறேன் என்பதை விட இந்த காத்திருப்பு வலிக்கிறது.

No comments:

Post a Comment