Friday 13 December 2013

அவள் விழி பார்வைகளை சந்திக்க முடிந்ததில்லை. பிரசாத் லேப் வாசலில் டீக்குடிக்க வரும் அனைவரிடமும் கை ஏந்துவாள். நடக்க இயலாத தள்ளாடும் தேகம். தலை சிக்கும் அழுக்கும் மண்டி கிடக்கும். வருடங்கள் வரிவரியாக முகமெங்கும். பசி கண்ணில் தெரியும். "சாப்டுறியா ?" என்று கேட்டால் ஆவலுடன் தலையாட்டுவாள்.  பிள்ளைகள் விட்டிருக்க கூடும். புத்தி பேதலித்திருக்க  கூடும். வழி தவறி திணறி இருக்க கூடும். இத்தனை கூடும்களும் என் அனுமானம்தான்.
"என்ன பரிமளம், சாப்டியா ?" அவளுக்கு ஒத்த வயதுள்ள ஒரு வயோதிகர் அவளிடம் கேட்டார். ஈனமாக இல்லை என்று தலையாட்டினாள். பெரியவர் சோத்து பொட்டலம் தண்ணீர் பாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போனார். எனக்கு ஆர்வம் அவரை பின் தொடர்ந்தேன், "ஐயா ! ஒரு நிமிஷங்க!". நின்று திரும்பினார். என் கையில் புகையும் சிகரெட்டை பார்த்தார். நான் அதை கீழே போட போக, "இல்ல ! புடிப்பா... எனக்கு குடேன்"  
 நான் என் சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்ட ஒரு சிகரெட்டை உருவி கொண்டார். இடுப்பில் சொருகி இருந்த தீப்பெட்டியால் பத்த வைத்து கொண்டார். "இன்னாப்பா ... கூப்ட ?"
"அந்த வயசானம்மா யாரு ? பேரு சொல்லி கூபிடுறீங்க?"  தயங்கி தான் கேட்டேன்.
"ஒரு காலத்துல அவளுக்கு செம டிமாண்ட்ப்பா. கோடம்பாக்கதாண்ட வூடு வச்சி தொழில் பண்ணிகினு இருந்தா... நானெல்லாம் பார்த்து ரசிச்சதோட செரி.. செம காஸ்ட்லி மால்.... மவுசு கொறையோ கொறையோ ... ரயில்வே ஸ்டேசனாண்ட நின்னு பண்ண ஆரம்பிச்சா... அப்பறம் வயசு போய்ட்சி... தளந்து பூட்டா! எவன் வருவான் ? சோத்துக்கு வழி இல்ல. எங்காலத்துல இவளாண்ட ஒரு வாட்டி போய்டணும் இருந்தேன். பாவம்! இப்போ  நென்ச்சி பாத்தா அப்போ நென்ச்சது அசிங்கமா இருக்கு. இளமைல பொறாமையா இருக்கும் இவள பாத்தா. எதோ என்னால முட்ஞ்சது, சோறு வாங்கி தருவேன்"
அவர் போய் வெகு நேரம் வரை நின்று கொண்டிருந்தேன். ரிடைர்மென்ட் எல்லா தொழிலுக்கும் பொருந்துவதில்லை. நமக்கு விவசாயம் சொல்லி கொடுத்த பெண்ணுக்கு நாம் பதிலுக்கு சொல்லி கொடுத்தது விபச்சாரம். ஊரார் உடல் பசி தீர்த்த அவளின் வயிற்று பசி தீர்த்து பிரயாச்சித்தம் செய்ய அவளை தேடினேன் அடுத்த நாள் சோறு வாங்கி தர.
அவள் இல்லை! வரமாட்டாள்!

No comments:

Post a Comment